எலிசபெத்தின் இழப்பால் இங்கிலாந்தில் ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி!
இங்கிலாந்தின் ராணி 2 ஆம் எலிசபெத் இறப்பால் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள துடுப்பாட்ட போட்டி ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து துடுப்பாட்ட வாரியம் அறிவித்துள்ளது.
உடல்நிலை மோசமானதை அடுத்து சிகிச்சை பெற்று வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 ஆவது வயதில் நேற்று (08) காலமானார்.
இதற்கிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி அந்நாட்டுடன் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் நாள் ஆட்டம்
அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (09) இடம்பெற இருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் மரணம் அடைந்ததையடுத்து இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்திற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதேவேளை, இங்கிலாந்திற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான ஆட்டம் மீண்டும் தொடங்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

