ஆரம்பமான க.பொ.த உயர்தர பரீட்சை ...! காவல்துறையினரின் விசேட அறிவித்தல்
புதிய இணைப்பு
ஆரம்பமாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து தேர்வு மையங்களுக்கும் விரிவான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. பிரடெரிக் வூட்லர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேவையான பாதுகாப்பை வழங்க மொபைல் மற்றும் இரவு ரோந்துப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த காவல்துறை சிறப்புப் படையின் உதவியும் பெறப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே (Indika Kumari Liyanage) தெரிவித்துள்ளார்.
அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாதகமான வானிலை
நாடு முழுவதும் 2362 பரீட்சை நிலையங்களில் இன்று முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை உயர் தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

இன்று ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதாகவும் இந்த பரீட்சார்த்திகளில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சைக் காலத்தில் பாதகமான வானிலை அல்லது இயற்கை பேரழிவுகளால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுக்க, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து ஒரு சிறப்பு கூட்டுத் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |