புலம்பெயர்ந்த தமிழருக்கு அழைப்பு -கோட்டாபயவை நம்பத் தயாரில்லை- கூட்டமைப்பு அறிவிப்பு
இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனின், முதலில் உள்ள உள்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அதனைவிடுத்து புலம்பெயர் மக்களுடனான பேச்சுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் நம்பிக்கைக்கொள்ள முடியாது என கூறியுள்ளது.
உள்ளூர் தமிழர்களை ஏமாற்றிய ஜனாதிபதி இன்று சர்வதேசத்தை ஏமாற்ற முடியுமென நம்பி செயற்படுவதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகளுடன் கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேச்சு நடத்தியுள்ளார். இதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன்,
புலம்பெயர் தமிழர்களை பேச்சுக்கு அழைக்கும் ஜனாதிபதியின் கருத்து குறித்து சந்தேகத்தை வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றத் தயார் என ஜனாதிபதி ட்விட்டர் ஊடாக தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டதும் வெளிவிவகார அமைச்சர் அதனை நிராகரிப்பதாகவும், வெளியாரின் தலையீட்டை விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே ஜனாதிபதி இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சர் வேறு வகையில் கருத்து வெளியிடுகின்றார். அதனைவிட புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சு நடத்த தயார் என தெரிவிக்கின்றார். அதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடவில்லை.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமெனின், இங்குள்ள தமிழ் பிரதிநிதிகளுடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வெளிநாட்டவர் தொடர்பில் பேசுகின்றனர். சுயநிர்ணயம் தொடர்பில் பேசுகின்றனர்.
எனினும் நாட்டிலுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென ஜனாதிபதியே கூறுகின்றார். அவரது கருத்துக்களை நாம் நம்பவில்லை. எங்களை ஏமாற்றிவிட்டு, இன்று சர்வதேசத்தை ஏமாற்ற முடியுமென நம்பி செயற்படுகின்றனர்.