தமிழர்களின் கண்ணீருக்கு பதில் தேடும் PTA- அதிகாரத்தின் ஆயுதம்! காலம் கடந்து குறிவைக்கப்படும் கோட்டாபய
கோட்டாபய ராஜபக்ச 2005 முதல் 2015 வரை பாதுகாப்பு செயலாளராக (Defense Secretary) பதவி வகித்த காலம், இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டமாகவும் அதற்குப் பிந்தைய காலமாகவும் இருந்தது.
இக்காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மிகத்தீவிரமாகவும், கடுமையான முறைகளிலும் பயன்படுத்தப்பட்டது.
ஆட்சியில் இருந்தவரை சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தினார்; இன்று அதே சட்டம் அவரைக் கேள்வி கேட்கிறது. அது தமிழ் மக்களின் கண்ணீருக்கும், கதறல்களுக்கும் பதில் கேட்கிறது.
பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய
பாதுகாப்பு செயலாளராக அவர் இருந்தபோது இச்சட்டம் நீண்ட கால தடுப்புக்காவல், வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டித்தல், வெள்ளை வான் கலாச்சாரம் மற்றும் கடத்தல்கள், போருக்குப் பிந்தைய புனர்வாழ்வு என்ற திட்டம் என நகர்ந்துக்கொண்டிருந்தது.

இச்சட்டத்தின் கீழ், எவ்வித நீதிமன்ற அனுமதியோ அல்லது பிணையோ இன்றி, சந்தேக நபர்களை 18 மாதங்கள் வரை தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு முழு அதிகாரம் இருந்தது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி நீண்ட காலம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்
சாதாரண சட்டங்களின்படி காவல்துறையிடம் வழங்கப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது.
ஆனால், PTA சட்டத்தின் கீழ், காவல்துறை அதிகாரியிடம் பெறப்படும் வாக்குமூலமே பிரதான சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இக்காலத்தில் சித்திரவதைகள் மூலம் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும், உத்தியோகபூர்வ கைதுகளுக்கு அப்பால், உளவுத்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரால் 'விசாரணைக்காக அழைத்துச் செல்லுதல்' என்ற பெயரில் வெள்ளை வான்களில் மக்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் இக்காலத்தில் பரவலாக அரங்கேறின.
சர்வதேச செய்தியாளர்களின் அறிக்கை
Gotabhaya acknowledges use of white vans to “take in” suspects, Gotabaya RAJAPAKSA - RSF என்ற சர்வதேச செய்தியாளர்களின் அறிக்கை இதன் கொடுமைகளை உலகுக்கு வெளிப்படுத்தி அதன் பாரதூரத்தை விளக்கியது.

இது குறித்து சர்வதேச ரீதியில் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மீதான ஒடுக்குமுறை, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு எதிராக மட்டுமன்றி, அரசாங்கத்தின் போர் உத்திகளை அல்லது ஊழல்களை விமர்சித்த ஊடகவியலாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும் இச்சட்டம் அச்சுறுத்தலாகப் பயன்படுத்தப்பட்டது.
அத்தோடு 2009 இல் போர் முடிவடைந்த பின்னர், சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தாமல், PTA சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைத்து புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பும் முடிவுகளை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டது.
கொடுங்கோன்மையான இலங்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (“PTA”) நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. பல பத்தாண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் காலத்திலிருந்து, இந்த PTA இலங்கை குடிமக்களை அச்சுறுத்தி வருகிறது.
பிடியாணையின்றி குடிமக்களை பதினெட்டு மாதங்கள் வரை தன்னிச்சையாகத் தடுத்து வைக்கவும்; வாக்குமூலங்களைப் பெறுவதற்காக சித்திரவதையைப் பயன்படுத்தவும்; போராட்டக்காரர்கள், சிறுபான்மைக் குழுக்கள் மற்றும் அரசியல் எதிரிகளைக் குறிவைக்கவும் இலங்கை அரசாங்கத்திற்கு PTA அதிகாரம் அளிக்கிறது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல், எண்ணற்ற மனித உரிமை மீறல்களுக்கு PTA ஒரு களத்தை உருவாக்குகிறது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தச் சட்டத்தின் பயன்பாடு தீவிரமடைந்துள்ளது.
PTAவின் பயன்பாடு
தற்போது, போராட்டக்காரர்கள், அரசியல் எதிரிகள், இன மற்றும் மத சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களைத் தடுத்து வைக்க PTA பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையின் பாதுபாப்பு செயலாளராக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த சட்டத்தை தனக்கும் தன் திட்டங்களுக்கும் கோலோச்சி வைத்துக்கொண்ட அவர்கள் இன்று அதன் வசமே சிக்கிக்கொண்டுள்ளார்.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில் பயங்கரவாத தடைச்சட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பக்கம் திரும்பியுள்ளது.
இது குறித்து நேற்று இடம்பெற்ற வழக்கின் முடிவில் கோட்டாபயவுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் திரும்பும் பல விடயங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் அவரைத் தொடர்புபடுத்துவதற்கு இன்றுவரை எந்த ஆதாரமும் வெளிப்படுத்தப்படாததால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டால் அவரது அடிப்படை சுதந்திரங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா நேற்று (18) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
பிரித்தானியாவின் சேனல் 4 ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையின் போது இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இந்த மனு விசாரிக்கப்பட்டது. மேலும், காவல்துறைத் தலைவர் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட ஒரு குழுவினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் ஏற்கனவே தனது கட்சிக்காரருக்குப் பயணத் தடை விதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி , சேனல் 4-இடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவதற்கான கடுமையான அபாயம் இருப்பதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
ஷானி அபேசேகர
குறிப்பாக, மனுவில் பிரதிவாதியாக உள்ள சிஐடி-யின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் பொய்யான சாட்சியங்களைத் தயாரித்ததற்காகக் கைது செய்யப்பட்ட ஓர் அதிகாரி என்றும், அத்தகைய ஒருவரிடமிருந்து நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை எதிர்பார்க்க முடியாது என்றும் ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டார்.

எந்தவொரு முன் விசாரணையுமின்றியும் சாட்சியமின்றியும் ஒருவரைக் கைது செய்வது, அரசியலமைப்பின் இயற்கை நீதிக் கோட்பாட்டிற்கு முரணானது என்றும், இது உயர் நீதிமன்றம் வழங்கிய 'ராடா வழக்கின் தீர்ப்பிலிருந்தும்' தெளிவாகிறது என்றும் சுட்டிக்காட்டிய அவர், சட்டமா அதிபர் திணைக்களம் சிஐடி-யின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுவர்ஷி ஹெரத், மனுதாரரின் சட்டத்தரணி நீதிமன்றத்தின் சார்பாக அல்லாமல் ஊடகங்களின் சார்பாக உண்மைகளை முன்வைப்பதாகத் தோன்றுவதாகப் பதிலளித்தார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் மனுதாரர் சார்பில் முன்னிலையாகியுள்ளார்.
இந்நிலையில் வாதங்களை கருத்தில் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான மேலதிக விசாரணையை 24ஆம் திகதி நடத்த முடிவு செய்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |