எரிபொருள் விலை அதிகரிக்கும் - அரசாங்கம் அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால், இலங்கையிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (22) கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை அதிகரிக்கும் என குறிப்பிட்ட அவர் இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எட்டவில்லை என தெரிவித்தார்.
அத்துடன், உக்ரைன்,ரஷ்யா நாடுகளுக்கு இடையில் எழுந்துள்ள யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.
எனினும், உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் பட்சத்தில், உள்நாட்டிலும் எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
