சமுர்த்தி வங்கி முறைமை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் சமுர்த்தி வங்கி முறையை முறைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கை முடிவின் ஒரு பகுதியாக, சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிச் சங்கங்களின் கணக்காய்வை தேசிய கணக்காய்வு அலுவலகத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் என்ற வகையில் 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் இலக்க திவிநெகும (திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி சட்டத்தின் இலக்கம் 1ஐ திருத்துவதற்கு இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலை கோரியுள்ளார்.
இதனடிப்படையில், இந்த நோக்கத்திற்காக தொடர்புடைய சட்டமூலத்தை தயாரிக்க சட்ட வரைவாளர் ஆலோசனை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு
குறித்த அமைப்புக்களை தேசிய கணக்காய்வு அலுவலகம், தணிக்கை செய்வதற்கும் அவற்றின் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கும் மக்களின் நம்பிக்கை மற்றும் ஏற்றுக்கொள்ளலை அதிகரிப்பதற்கும் உதவும் என அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (28) வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரகாரம் நுண்நிதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் 1092 சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகளும் 335 சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிச் சங்கங்களும் இயங்கி வருகின்றன.
சமுர்த்தி சட்டத்தின் விதிகளின்படி, சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமூக அடிப்படையிலான வங்கிச் சங்கங்கள் அபிவிருத்தி திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவினால் வருடாந்தம் தணிக்கை செய்யப்படுகின்றன.
தேசிய கணக்காய்வு
எவ்வாறாயினும், சமுர்த்திச் சட்டமானது தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்ற விதியை உள்ளடக்கவில்லை.
இதன்படி, சமுர்த்தியை வலுப்படுத்தும் நோக்கில் சமூக அடிப்படையிலான வங்கி முறைமை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சமுர்த்தி பயனாளியை வலுவூட்டும் நோக்கத்தில் இருந்து விலகி தற்போது இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயற்படுவதை அவதானிக்க முடிவதாக பந்துல தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அஸ்வெசும நலன்புரி நன்மைகளை மக்களுக்கு வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியின் நுண்நிதி வங்கி அமைப்பாக சமுர்த்தி வங்கி முறையை ஒழுங்குபடுத்துவதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
இதனடிப்படையில், சமுர்த்தி வங்கியை முறைசாரா வங்கியாக தொடர்வதால் அதனை அரச கிராமிய வங்கியாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |