30 வருடங்களின் பின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் காவல் நிலைய காணி
யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணி யாழ். நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில் அதன் உரிமையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் காவல் நிலையம், கடந்த 30 வருடங்களாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலும் பயன்பாட்டிலும் இருந்து வந்தது.
அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்கு பலன்கிட்டவில்லை.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான 07 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.
எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை காவல்துறையினர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.
தற்காலிகமாக மாற்றம்
இந்த நிலையில், இன்றையதினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வருகைதந்து, அங்குள்ள காவல்துறையினரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளித்தனர்.
தற்போது கோப்பாய் காவல் நிலையம் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
கோப்பாய் காவல் நிலையம் தனித்து இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் தமக்கு காணி இல்லை என வேறு இடத்தில் நீண்ட காலமாக வாசித்து வந்தனர். இன்றைய தினம் காணி கையளிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













