யாழ் நகரிலும் ட்ரோன் கமராக்கள் மூலம் மக்களின் நடமாட்டம் கண்காணிப்பு
நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ளநிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணப் பொலிசார் மற்றும் இலங்கை விமானப் படையினரும் இணைந்து ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்
யாழ். நகரம், நல்லூர் ஆலயம் மற்றும் யாழ் நகரப் பகுதிகளில் விமானப்படையின் ட்ரோன் கமராக்களின் உதவியுடன் பொது மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்பவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
விமானப்படையின் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு நடமாடும் பொதுமக்கள் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெரனாண்டோ தலைமையிலான பொலிஸ் மோட்டார் சைக்கிள் படையணியினரால் கைது செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்
மேலும் நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பயணத்தடையின் போது அத்தியாவசிய தேவை தவிர்ந்த வேறு எவரும் பயணிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அவ்வாறு பயணிப்போர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் தற்போது நாட்டில் தீவிரமாக பரவி பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த யாழ்.மாவட்டத்தில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.