யாழில் 570 மீற்றர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்: கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு
யாழில் முன்னெடுக்கப்பட்ட வீதி ஒன்றின் புனரமைப்பு தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
வீதியினை புனரமைக்க கூடுதலான நாட்கள் சென்றதாகவும், ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் கடுமையான குற்றச்சாட்டுக்களை பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் முன் வைத்துள்ளார்.
43 வீதிகள் புனரமைப்பு.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான 43 வீதிகள் கடந்த வருடம் 2025ஆம் ஆண்டு பிரதேச செயலகம் ஊடாக நிதி விடுவிக்கப்பட்டு , பிரதேச செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதில் மாங்கொல்லை வீதியானது 570 மீற்றர் நீளமும் , 3.90 மீற்றர் அகலமும் கொண்ட வீதியாகும். அதன் புனரமைப்பு பணியினை ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் ஒருவர் வீதி புனரமைப்பு பணிகளுக்கான வேலையினை பெற்றிருந்திருந்தார்
570 மீட்டர் நீள வீதியை புனரமைக்க 76 நாட்கள்

குறித்த வீதியின் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் வேலையை ஆரம்பிக்காது காலம் தாழ்த்தி வந்த ஒப்பந்தக்காரரால் வீதியின் புனரமைப்பு பணிகளை முடித்து வீதியின் இரு மருங்கிலும் மண் இட்டு வேலையை கடந்த 13ஆம் திகதியே பூர்த்தி செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் 570 மீற்றர் நீளமான வீதியினை புனரமைக்க ஒப்பந்தக்காரருக்கு 76 நாட்கள் தேவைப்பட்டுள்ளன” என்றார்.
வீதிபுனரமைப்பு தொடர்பில் குற்றச்சாட்டு

மாங்கொல்லை வீதியின் நடுவில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பத்தினை இழுத்து கட்டியிருந்த கம்பி காணப்பட்டது.
வீதி புனரமைப்பின் போது அதனை அகற்றி, வீதியினை புனரமையுங்கள் என பிரதேச செயலகத்தினரிடமும் மின்சார சபையிடமும் அது தொடர்பில் கோரிக்கை வைத்தேன்.
ஆனால், அவர்கள் வீதியின் நடுவில் உள்ள கம்பியை தாங்கள் அகற்றுவது எனில் தமக்கு அதற்கான செலவீனங்களை தர வேண்டும் அதனை யார் தருவார்கள் என என்னிடம் கேள்வி எழுப்பினார்கள்.
வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை

இது தொடர்பில் நான் பிரதேச செயலகத்திடம் மீண்டும் கம்பியை அகற்றி விட்டு பணியை தொடருமாறு கோரிய போது, என்னையே கடிதம் கொண்டு வருமாறு அலைக்கழித்தனர்.
பின்னர் ஒருவாறு அந்த கம்பி கழட்டப்பட்ட பின்னர் , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பிரதேச செயலர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தேன்.
வீதியில் பயணித்தவர்களின் சிரமம் ஒரு கட்டத்தில் ஒப்பந்தக்காரர் வேலையை முடித்து தருகிறார் இல்லை. நீங்களே அவருடன் கதைத்து உங்கள் வீதி வேலையை முடியுங்கள் என எனக்கு அவரின் தொலைபேசி இலக்கத்தை தந்தனர்.
அவரிடம் அது தொடர்பில் தொடர்பு கொண்டு கதைத்த போது விரைவில் முடித்து தருவேன் என உறுதி அளித்து , வீதியில் கற்களை பரவி விட்டு ஆட்கள் வர மாட்டார்கள், அந்த வீதியில் பயணித்தவர்கள் வீதியில் கொட்டப்பட்ட கற்களுக்கால் சிரமத்துடன் பயணித்தனர்.
வீதியின் தரத்தில் திருப்தி இல்லை

இதனையடுத்து தொடர் இழுபறிகளுக்கு மத்தியிலையே வீதி புனரமைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி, வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து 76 நாட்கள் சென்ற பின்னரே 570 மீட்டர் நீளமான வீதியினை புனரமைத்து முடித்துள்ளனர்.
76 நாட்களாக புனரமைக்கப்பட்ட வீதியின் தரத்தில் கூட எமக்கு திருப்தி இல்லை.
எனவே பிரதேச செயலகத்தினால் புனரமைக்கப்பட்ட 43 வீதிகளின் புனரமைப்பு பணிகளையும், அந்த வீதிகளின் தரத்தினையும் மீள் சோதனை செய்ய வேண்டும் என கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |