போதைப்பொருளுக்கு அடிமையான பெருமளவு மாணவிகள் - வெளியான அதிர்ச்சிகர தகவல்
வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பெருமளவிலான மாணவிகள் தற்போது ஐஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பல பிரதான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகள் அதிகளவானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுடன், எட்டாம் வருடத்தில் இருந்து உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவிகளே இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகள்
வடமேல் மாகாணத்தின் பிரதான நகரங்களில் அமைந்துள்ள பிரதான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகள் இவ்வாறு போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் தமது காதலர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகள் ஊடாக போதைப்பொருளை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில காலங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற துலே எனும் போதைப்பொருள் தற்போது மாணவிகள் மத்தியில் பரவலாக காணப்படுவதாகவும், பாடசாலை நேரங்களில் கழிவறைக்கு செல்லும் போது இதனை அடிக்கடி பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
தனியார் பயிற்சி வகுப்பு
மேலும், வார இறுதி நாட்களில் முக்கிய நகரங்களில் நடத்தப்படும் தனியார் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கிறேன் என்ற போர்வையில் மாணவிகள் தங்கள் ஆண் நண்பர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இந்த போதைப்பொருளை குடிக்க ஆசைப்படுவதும் தெரியவந்துள்ளது.
இது மிகவும் பாரதூரமான பிரச்சினை எனவும், இதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத குருநாகல் பாடசாலையின் அதிபர் ஒருவர் தெரிவித்தார்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாட்டின் ஒட்டு மொத்த பாடசாலை முறையும், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இளைஞர்களும் போதைக்கு அடிமையாவதை தடுக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாரதூரமான நிலை
இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள வடமேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி ராஜித ரத்நாயக்க, இது மிகவும் பாரதூரமான நிலை என்பதால் இது தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஹலவத்தை பிரதேசத்தில் இவ்வாறான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு அப்பிரதேச பாடசாலைகள் கடுமையான நடைமுறைகளை பின்பற்றுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
