தேர்தலில் தனித்து களமிறங்குமா தமிழரசு கட்சி - உண்மை நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சுமந்திரன்!
தமிழரசு கட்சி தனியாக போட்டிடுவது என்பது, தமிழரசு கட்சியின் தனி முடிவல்ல, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து தான் இந்த முடிவை எடுக்க உள்ளோம் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகவே தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது குறித்து , பங்காளி கட்சிகளுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் முடிவு எடுப்போமே தவிர தனித்து தீர்மானத்தை எடுப்போம் என கூறவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போது உள்ள தேர்தல் முறையின் அடிப்படையில் நாங்கள் போட்டியிடுவோமாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டால் கூடுதலான ஆசனத்தினை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
தனித்து போட்டியிடுவது தொடர்பான தீர்மானம்
சில இடங்களில் போட்டிடுவதால் ஆசனங்கள் கூடும் என கூற முடியாது. ஆனால் சில இடங்களில் கூடலாம். சில இடங்களில் குறையலாம். நாங்கள் பலமாக இருக்கின்ற பிரதேசங்களில் போட்டியிட்டால், எல்லா வட்டாரத்தையும் ஒரே கட்சி வெல்லுமாக இருந்தால் மட்டுமே விகிதாசாரத்தில் வருகின்ற ஆசனத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரே கட்சியாக போட்டியிட்டால் வட்டாரங்களில் கூடுதலாக வென்றால் விகிதாசார முறையில் நமக்கு ஆசனங்கள் கிடைக்காது. இந்த கணக்கினை அடிப்படையாக வைத்து தான் ஒரு தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் இதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம்.
இது சம்பந்தமாக பங்காளி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனுடனும் ,சித்தார்த்தனுடனும் பேசியிருக்கின்றேன் எனவே அவர்களுடன் பேசித்தான் இந்த நாங்கள் விடயத்தினை அறிவித்திருந்தோம்.
ஆனால் நாங்கள் இறுதி முடிவெடுக்கவில்லை. ஒவ்வொரு பிரதேசத்திலும், ஒவ்வொரு சபையிலும் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை வைத்து நாங்கள் அந்த முடிவை எடுப்போம்.
சில வேளைகளில் சில இடங்களிலே சேர்ந்து போட்டியிடலாம். சில இடங்களில் தனித்தனியே போட்டிடலாம். எனவே அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு தொழில்துறை ரீதியாக அந்த தீர்மானங்கள் எடுக்கப்படும்.
பங்காளி கட்சியுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் இந்த முடிவின் எடுப்போமே தவிர நாங்கள் தமிழரசு கட்சியாக தனித்து தீர்மானத்தை எடுப்போம் என கூறவில்லை. பங்காளி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசித்தான் முடிவினை எடுப்போம்” என தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழரசு கட்சியின் செயற்குழு கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பாக இல்லாமல், தனித்தனியாக தேர்தல்களை எதிர்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)