வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுப்பு
🛑 புதிய இணைப்பு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று, கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்டைக்காடு கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நினைவேந்தலில், வீதியால் சென்று வரும் அனைவருக்கும் தேங்காய் சிரட்டையில் கஞ்சி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Lintan Lintan
🛑 ஐந்தாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் வாரத்தின் முதல் நாளில் கம்பர்மலை இளைஞர்களின் ஏற்பாட்டில், வன்னிச்சி அம்மன் ஆலயத்தில் உயிரிழந்த மக்களுக்காக ஆத்மா சாந்தி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து கம்பர்மலை சந்தியில் அமைந்துள்ள முதல் மாவீரர் சங்கர் நினைவுத் தூபியில், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் கம்பர்மலை இளைஞர்களால் வழங்கப்பட்டது.
இந்த ஆத்மா சாந்தி பூஜை வழிபாடுகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலிலும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் யூகதீஸ், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தயாபரன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Khandeepan Thangarajah
🛑 நான்காம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் தினத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பின் நினைவைச் சுமந்த ஊர்திப் பவனி இன்று செவ்வாய்க்கிழமை (12.05.2026) காலை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலிருந்து காலை 9.00 மணியளவில் ஆரம்பமான இந்த ஊர்திப் பவனியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் கருப்புக் கொடிகள், நினைவுப் பதாகைகள் மற்றும் தமிழர் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் ஏந்தப்பட்டிருந்தன.
மேலும், உயிரிழந்த மக்களுக்காக அகவணக்கமும் செலுத்தப்பட்டது. பவனியில் கலந்துகொண்டவர்கள் தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் மற்றும் முள்ளிவாய்க்காலை மறக்க முடியாது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதுடன் மே 18 தமிழின அழிப்பு நாளை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனுடன், முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் மக்கள் எதிர்கொண்ட பட்டினி மற்றும் மனிதாபிமான அவலங்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பெருமளவான மக்கள் அந்தக் கஞ்சியைப் பெற்றுக்கொண்டதுடன் போரால் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து அமைதியான அஞ்சலியையும் செலுத்தினர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் உண்மைகள் உலகிற்குத் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த மக்களின் நினைவு தமிழர் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஊர்திப் பவனி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள் வழியாக முன்னெடுக்கப்பட்டதுடன், பொதுமக்களும் வீதியோரங்களில் நின்று அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Thampithurai Piratheepan
🛑 மூன்றாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம், இன்று வல்வெட்டித்துறை ஆலடியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சிப் பரிமாறப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நினைவாக ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் பருத்தித்துறை நகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பருத்தித்துறை நவீன சந்தைத் தொகுதியில், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ. ஜெயகோபி தலைமையில் மதியம் 12:00 மணியளவில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
முதல் நிகழ்வாகப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் மக்கள் பருகிய உப்புக் கஞ்சி பரிமாறப்பட்டது.
இதில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி. வேந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான கிருஷ்ணகோபால் கலைச்செல்வன், அகஸ்டின், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நாகர்கோவில் குட்டி, பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்களான ஜெயானந்தம் ஜெயகோபி, ஸ்ரீக்கண்ணன் ஸ்ரீபிரகாஷ் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Khandeepan Thangarajah
🛑 இரண்டாம் இணைப்பு
இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் வேண்டுகோள் ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே 18 அன்று அனைத்து வீடுகள், மத வழிபாட்டுத் தலங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் சுடரேற்றி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Thampithurai Piratheepan
🛑 முதலாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரமானது இன்றைய தினம் ஆரம்பமாகிறது.
இதன்போது நினைவு ஊர்தியில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நினைவு ஊர்தி
காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒரு பிரிவாகவும் தமிழ்த் தேசியப் பேரவையினர் ஒரு பிரிவாகவும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வலி நிறைந்த நினைவுகளைச் சுமந்தவாறு முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியும் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணிக்கத் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Puvaneshwaran Kajinthan
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




