கனடாவுக்கு செல்ல தயாரான இளம் மருத்துவரின் உயிரிழப்பு! காதலன் குறித்து அம்பலமாகும் தகவல்
தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வைத்தியரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறை , சந்தேக நபரான காதலன் குறித்து அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி ஆவார்.
அவரது சடலத்தை காருக்குள் விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் 38 வயதுடைய காதலன், சட்டபூர்வமாக திருமணமான நபர் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போலியான காதல் உறவு
சந்தேகநபர் ஆரம்பத்தில் கண்டனோருவ (Gannoruwa) பகுதியைச் சேர்ந்தவர் எனத் தகவல்கள் வெளியானபோதிலும், அவரது உண்மையான நிரந்தர வசிப்பிடம் குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல பகுதி என விசாரணைகளை முன்னெடுத்து வரும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் செல்வந்த பெண்கள் மற்றும் இளம் பெண்களுடன் போலியான காதல் உறவுகளை ஏற்படுத்தி, அவர்களிடமிருந்து பணத்தை நுட்பமான முறையில் மோசடி செய்த பெரியளவிலான ஏமாற்றுவேலைகளை செய்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவருக்கு எதிராக ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் நிதி மோசடி தொடர்பான பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், பல நீதிமன்றங்களில் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையில் வழுக்கை கொண்ட நபரான இவர், பெண்களை ஏமாற்றுவதற்காக செயற்கை முடி (விக்) பயன்படுத்தியதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர் கணினி மென்பொருள் பொறியியலாளர் என ஆரம்பத்தில் சில ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் முற்றிலும் தவறானவை என விசாரணைகளை மேற்கொண்டு வரும் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட கார்
உயிரிழந்த வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட கார் கூட, சந்தேகநபர் இரகசிய உறவு பேணியதாகக் கூறப்படும் அம்பாறை பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்குச் சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணிடமிருந்தும் காவல்துறை விரிவான வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும், உயிரிழந்த இளம்பெண்ணும் சந்தேகநபரும் நுவரெலியாவில் உள்ள ஒரு விடுதியில் கடந்த ஜூன் 3 முதல் 16 ஆம் திகதி வரை ஒன்றாக தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அங்கு இளம்பெண் கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது சடலம் காரில் ஏற்றப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலை வாகனத் தரிப்பிடத்திற்கு அருகில் கொண்டு வந்து கைவிடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தீவிரமாக சந்தேகிக்கின்றனர்.
அத்துடன், காதலனுடன் கனடாவுக்கு செல்லும் நோக்கில், உயிரிழந்த இளம்பெண் வங்கியிலிருந்தும் பலரிடமிருந்தும் அதிக வட்டியில் சுமார் 15 மில்லியன் ரூபாய் (1.5 கோடி ரூபாய்) தொகையைப் பெற்றுக் கொண்டு, அதனை முழு நம்பிக்கையுடன் சந்தேகநபரிடம் வழங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்வதற்காக, பல விசேட காவல்துறை குழுக்கள் தற்போது நாடு முழுவதும் விரிவான தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |