பத்து இலட்சத்தை நெருங்கும் சுற்றுலா பயணிகள் -தொடர்ந்தும் முதலிடத்தில் இந்தியா
இந்த மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மட்டும் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 23 ஆயிரம் பேர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் வந்த சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவே முதலிடம்
பல்வேறு நாடுகளில் இருந்தும் இவ்வாறு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில் தொடர்ந்தும் இந்தியாவே முதலிடம் பிடித்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் மாதத்தில் முதல் ஆறு நாட்களில் மட்டும் 6 ஆயிரத்து 188 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து ஆயிரத்து 693 நபர்களும், ஜேர்மனியிலிருந்து ஆயிரத்து 513 பேரும், ரஷ்யாவிலிருந்து ஆயிரத்து 434 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து ஆயிரத்து 127 பேரும் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், சீனாவில் இருந்து ஆயிரத்து 114 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பத்து இலட்சத்தை நெருங்கும்
ஓகஸ்ட் மாதத்தில் மொத்தம் 136,405 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 927,214 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
