மயிலத்தமடுவில் 3000 ஏக்கர் காணியை விடுவிக்க திட்டம்! அரசாங்கத்தின் நடவடிக்கை
மட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பை நாம் விடுவிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
3000 ஏக்கர் நிலப்பரப்பு
“மாதவனை மயிலத்தமடு பிரதேசத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பை நாம் விடுவிப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதன் முதற்கட்டமாக மகாவலி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 1400 ஏக்கர் காணியும் வெகு விரைவாக விடுவிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அதற்கான நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதுபோன்று வன இலாகாவிற்குச் சொந்தமான காணியையும் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் கொண்டு இருக்கிறோம்.
ஒட்டுமொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல் தரைக்கான தேவையை வெகுவிரைவில் நாம் பூர்த்தி செய்வோம். மேலும், கிவுல் ஓயா திட்டம் என்பது ஒரு குடியேற்றத் திட்டம் இல்லை.
அது ஒரு நீர்ப்பாசனத் திட்டமாகும். வடக்கு மாகாணத்திற்கு அதிகளவு நீர் தேவைகள் இருக்கின்றன.
அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளன. அங்குள்ள பரந்த நிலப்பரப்புகளை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது.
விவசாயிகளுக்கு நீர் தேவை
அதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகளுக்கு நீர் தேவையை சரியான முறையில் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக விவசாயிகள் நன்மை அடையக்கூடிய சூழல் ஏற்படும்.
அதனை நாங்கள் செயற்படுத்த தயாராக இருக்கின்றோம். கடந்த காலங்களில் கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொள்வதற்கு கொண்டு வந்த திட்டங்களை சட்டவிரோதமான குடியேற்றங்கள் இடம்பெற்று இருந்தன.
இன பரம்பலை குழப்பத்திற்கு உள்ளான பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எமது அரசாங்கம் எந்த விதமான செயற்பாடுகளை நாங்கள் ஈடுபட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |