இன - மதவாதம் குறித்து அமைச்சர் சந்திரசேகர் வெளியிட்ட கருத்து
இனவாதம், மதவாதம் மற்றும் குலபேதம் என்பவற்றை இந்த தலைமுறையுடனேயே இல்லாதொழித்துவிட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அந்த வாழ்த்து செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது,“ மலர இருக்கும் விசுவாசுவ வருடமானது, எல்லா மக்களுக்கும் அன்பையும், நிறைந்த ஆரோக்கியத்தையும், மிகுந்த சந்தோஷத்தையும், பல்வேறு வெற்றிகளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும்.
இன நல்லிணக்கம்
இந்த விடயத்தில் இயற்கை மீது மட்டும் பொறுப்பை வழங்காது, அந்த இலக்குகளை மக்கள் அடைவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் உரிய களத்தை அமைத்துக்கொடுப்போம்.
ஒரு நாடாக நாம் மீண்டெழுந்தால் நிச்சயம் மேற்கண்டவாறு நாம் வேண்டும் பிரார்த்தனை ஈடேறும். எனவே, இலங்கையர்களாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு நாம் ஒன்றாக முன்னோக்கி செல்ல வேண்டும்.
இனவாதம், மதவாதம், குலபேதம் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது. அதனை இந்த தலைமுறையுடனேயே இல்லாதொழித்துவிட வேண்டும்.
தமிழ் - சிங்கள புத்தாண்டு
எமது நாடு இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு இவைகூடம்கூட பிரதான காரணங்களாகும். அவற்றை நாம் நிச்சயம் மாற்றியமைப்போம்.
எனவே, மக்களின் கனவை நனவாக்குவதற்கு புத்தாண்டில் மேலும் மேலும் துணிச்சலுடன், நல்லெண்ணம் கொண்டு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என உறுதியளிக்கின்றேன்.
இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் நிலையானதொரு அமைதியை ஏற்படுத்துவதற்கு நாம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்த தமிழ், சிங்கள புத்தாண்டும் ஒரு உந்துதலாக அமையும்.”என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
