உட்கட்சி கிளர்ச்சிக்குப் பணிந்தார் பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் இன்று எதிர்கொண்டிருக்ககூடிய உட்கட்சி கிளர்ச்சி வார இறுதியில் கென்சவேட்டிவ் கட்சியில் உள்ளக ரீதியில் இடம்பெற்ற பேச்சுக்களின் ஊடாக தவிர்க்கப்பட்டுள்ளது.
இணையத்தளங்களின் பாதுகாப்பு தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் தேவையென 50 க்கு மேற்பட்ட கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் கிளர்ச்சிசெய்திருந்த நிலையில், தற்போது அவர்கள் கோரியவிதிகளுக்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளதாக தெரிகிறது.
இணைய வலையமைப்பு திருத்தம்
பிரித்தானியாவில் சேவையில் உள்ள இணைய வலையமைப்புத் தளங்களில் சிறார்களை பாதிக்கும் வகையில் தீங்கான விடயங்கள் வெளிவந்தால் அவற்றைத் தடுக்கத் தவறும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில் இந்தத் திருத்தம் வரவுள்ளதாக தெரிகிறது.
இந்தத் திருத்தம் உள்ளடக்கப்படாவிட்டால் அரசாங்கம் கொண்டுவரும் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்போவதான எச்சரிக்கைகளை 50 க்கு மேற்பட்ட கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் விடுத்திருந்த நிலையில் தற்போது இந்த உடன்பாடு வந்துள்ளதாக தெரிகிறது.
இதன் அடிப்படையில் இந்தத் திருத்தத்தை கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கும் தமது திட்டங்களை கைவிட்டுள்ளனர்.
பின்வரிசை உறுப்பினர்களின் அழுத்தம்
இந்தத் திருத்தத்தைக் கோரிய கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களில் கென்சவேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவர் சேர்.இயன் டங்கன் ஸ்மித், முன்னாள் உள்துறை அமைச்சர் பிரிதிபடேல் மற்றும் அன்ரியா லீட்சம் உட்பட குறைந்தது 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக் கடந்த ஒக்டோபரில் பிரதமராக பொறுப்பேற்ற நாளில்
இருந்து, பின்வரிசை உறுப்பினர்களின் அழுத்தத்தால் பிரதமர் ரிஷி சுனக்
பின்வாங்குவது இது மூன்றாவது முறையாகும்.