சிறுமி மீது பாலியல் அத்துமீறல் : ஐ.ஆர்.சி. பட்டியலில் உள்ள சந்தேகநபருக்கு பிணை
மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில், 13 வயது சிறுமி ஒருவரைக் கடத்திப் பாலியல் அத்துமீறல் செய்த குற்றச்சாட்டில் கைதான ஐ.ஆர்.சி. (IRC) பட்டியலில் உள்ள சந்தேகநபர் ஒருவரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை (08) பிணையில் விடுவித்துள்ளது.
போதைப்பொருள் வியாபாரியான 31 வயதுடைய சந்தேகநபர், சிறுமியின் உறவினர் ஆவார். சிறுமியின் குடும்பத்தில் நிலவிய பிரச்சினை காரணமாக,சிறுமி உறவினரான சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்று தங்குவது வழக்கம்.
நள்ளிரவு நேரம் நிகழ்ந்த அத்துமீறல்
கடந்த 6ஆம் திகதி இரவு அங்கு தங்கியிருந்த சிறுமியை, நள்ளிரவில் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று, வீட்டின் பின்புறமிருந்த பாழடைந்த காணியில் வைத்து சந்தேகநபர் பாலியல் அத்துமீறல் புரிந்துள்ளார்.

சம்பவத்தை மூடிமறைக்கப் பெற்றோர் முயன்ற நிலையில், பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலின் பேரில்,காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி சந்தேகநபரைத் திங்கட்கிழமை (07) கைது செய்தனர்.
பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நீண்டகாலமாகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும், காவல்துறையின் ஐ.ஆர்.சி. பட்டியலில் உள்ள குறித்த சந்தேகநபரை, நீதிமன்றம் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்துள்ளது. இத்தீர்ப்பு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |