சிறையில் உள்ள நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி!
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சிறை ஊடகப் பேச்சாளர் செனக பல்லேதென்ன கூறியுள்ளார்.
மேலும், நாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பிரிவில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு மூன்று பேர்
அத்தோடு நாளொன்றுக்கு மூன்று பேர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையில் தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான ஒரு பரிவர்த்தனையில், ரூ. 100 மில்லியன் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த விசாரணையின் தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |