ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்!(படங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதைச் சுட்டிக்காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஹட்டன் நகரில் இன்று மாலை மூன்று மணியளவில் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான வி.இராதாகிருஸ்ணன், ஆகியோர் கலந்து கொண்டதோடு, இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கியமானவர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொண்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, தொடர் மின் விநியோக துண்டிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் இவற்றின் காரணமாக மலையக மக்களும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








