சிறிலங்கா வரலாற்றில் முதல் முறையாக இடம்பெற்ற முற்றுகைப் போராட்டம்- கோட்டாபய புரிந்துகொள்ள வேண்டியது இதுவே!
சிறிலங்கா அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அரச தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது இதுவே முதல் முறையாகும். அதற்கு காரணம் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலே, இதனால் மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையே அது எடுத்துக் காட்டுகின்றது என மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நான் தான் நன்றாக செய்தேன் என்று கூறிய கோட்டாபயவுக்கு மக்கள் நேற்று பதில் வழங்கியுள்ளார்கள் எனவும் இதனை புரிந்து கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை கோட்டாபய திட்டமிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச தலைவருக்கு எதிராக அவரை பதவியிலிருந்து வெளியேறுமாறு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் அனேகமானவர்கள் இளைஞர்களே. ஆனால் இதே இளைஞர்கள் தான் அன்று கோட்டபாய ராஜபக்ச அரச தலைவராக வர வேண்டும் என்று முன்னின்று வாக்களித்தார்கள்.
ஆனால் இன்று அதே இளைஞர்கள் அரச தலைவர் பதவி விலகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கோஷம் இடுகின்றார்கள். அந்தளவிற்கு இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அரச தலைவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டமானது எந்தவிதமான அரசியல் கட்சிகளின் தலைமையிலோ அல்லது பொது அமைப்புகளின் தலைமையிலோ இல்லாமல் மக்களாகவே முன்வந்து இந்த ஆரப்பாட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார்கள்.
இது போன்ற இன்னும் பல போராட்டங்கள் இடம்பெறும்.
எனவே இதை புரிந்து கொண்டு கோட்டாபய உரிய தீர்வினை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
