அவுஸ்ரேலியாவின் சுப்பர் 8 கனவை தகர்த்தது இலங்கை அணி
ரி20 உலககிண்ண கிண்ணப்போட்டியில் இன்று கண்டியில் அவுஸ்ரேலியாவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
சிம்பாப்வேக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவுஸ்திரேலியா களம் இறங்கியது.
நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.மிட்செல் மார்ஷ் (54), டிராவிஸ் ஹெட் (56) ஆகியோரின் அரைசதத்தால் அவ்வணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. பத்தும் நிஷங்க, குசல் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.எனினும் குசல் பெரேரா 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
பதும் நிசங்க அபார சதம்
அடுத்து நிஷங்க உடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குசல் மெண்டிஸ் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பவன் ரத்னாயக்க களம் இறங்கினார். பதும் நிசங்க 52 பந்தில் சதம் விளாசினார். இந்த ரி20 உலகக் கோப்பையில் முதல் சதம் இதுவாகும். இவரது சதத்தால் இலங்கை 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நிசங்க 100 ஓட்டங்களுடனும், ரத்னாயக்க 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று சுப்பர்8 சுற்றுக்கு முன்னேறியது. அவுஸ்திரேலியாவின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் மங்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |