முல்லைத்தீவில் துயரம் : காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு (Mullaitivu) - புலிமச்சிநாதிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - மாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புலிமச்சநாதிகுளம் பகுதியில் நேற்று (03.08.2025) சிவபாதம் ஸ்ரீகாந்தன் என்ற 43 வயதான குடும்பஸ்தர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், காணாமல்போன குடும்பஸ்தருடைய மேற்சட்டையும், கைத்தொலைபேசியும் புலிமச்சிநாதிகுளக் கட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்ததுடன், காணாமல்போன குடும்பஸ்தர் தொடர்பில் பல சந்தேகங்களும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , மாங்குளம் காவல்நிலையத்திற்குச் சென்று, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தார்.
காணாமல்போனவரை காவல்துறையினர் தேட தயாரான நிலையில் , குறித்த நபர் சடலமாக புலிமச்சினாதி குளத்தில் இனங்காணப்பட்டதாக ஊர்மக்களால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




