மதுக் கூடமொன்றில் கொல்லப்பட்ட பெண்! பிரித்தானியாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்
பிரித்தானியாவின் லிவர்பூலிற்கு அருகில் உள்ள மதுக் கூடமொன்றில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் இது நத்தார் பண்டிகைக்கு முன்னர் உண்மையிலேயே அதிர்ச்சியூட்டும் பேரழிவை தரும் ஒன்றாக உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
துப்பாக்கி சூடு
லீவர்பூலுக்கு அருகே வொலெசே கிராமத்தில் உள்ள மதுக் கூடத்தில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேர்சிசைட் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மூன்று ஆண்களும் பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடும் காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அதிகளவில் பிரசன்னமாகியிருந்த இடத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரி டேவ் மெக்கோக்றன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்தாரி மாயம்
தாக்குதலை நடத்திய சந்தேகநபர், மதுபான கூடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இருப்பார்கள் ஆயின், முன்வந்து தகவல்களை வழங்குமாறும் காவல்துறை அதிகாரி டேவ் மெக்கோக்றன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் அவரின் குடும்பத்தினருக்கு ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் எனவும் டேவ் மெக்கோக்றன் மேலும் தெரிவித்துள்ளார்.