விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் சிறிலங்காவும் நிலவில் கால் பதித்திருக்கும்!
நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற புகழை இந்தியா பதிவாக்கியிருக்கிறது. நிலவை ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் - 3 விண்கலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய தகவல் உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பி இருக்கிறது.
இந்திய விண்வெளிப் பயணத்தின் புதிய மைல் கல்லாக இச் சாதனை அமையப் பெற்றிருக்கிறது.
‘இந்தியா நிலவில் உள்ளது’ என்ற சிறப்பை இஸ்ரோ தலைவர் தேசப் பெருமையுடன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தான் சிறிலங்கா நிலவில் கால் பதிக்குமா? என்ற கேள்வி இலங்கை சமூக வலைத் தளங்களில் முக்கிய பேசுபொருள் ஆகியுள்ளது.
சிறிலங்கா நிலவில் கால் பதிக்குமா?

இந்த இடத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆசியப் பிராந்தியம் தொடர்பிலும் அதில் சிறிலங்கா தொடர்பிலும் முன் வைத்த கருத்துக்கள் முக்கியமாக நினைவுபடுத்த வேண்டியவை ஆகின்றன.
இருப்தோராம் நூற்றாண்டு ஆசியாவின் சகாப்தமாக அமையும் என்றும் எமது பிராந்திய நாடுகள் அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகள் என்று புதிய பாதையிலே பயணிக்கின்றன என்றும் மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும், தீராத வியாதிகளுக்கு தீர்வுகள் தேடவும் புதிய பயணத்தில் இறங்கியிருப்பதாகவும் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் இவ்வாறு பதிவு செய்துள்ள தலைவர் பிரபாகரன், அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையும் கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புதிய முயற்சியிலே ஆசிய நாடுகள் காலடி வைத்துள்ளமையை பதினாறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துப் பேசியுள்ளார்.
அத்துடன் மற்றொரு முக்கியமான வேதனை தருகின்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா மாத்திரம் நேரெதிர் திசையில்

ஆசியப் பிராந்திய நாடுகளும் உலகமும் இவ்வாறு பயணிக்கும் வேளையில் சிறிலங்கா மாத்திரம் அதற்கு நேரெதிர் திசையிலே அழிவு நோக்கிய பாதையிலே சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
உலகில் உள்ள நாடுகள் கண்டுபிடிக்களுக்கும் புதிய படைப்பளுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் பெரும் முக்கிய இடத்தை கொடுக்கும் நிலையில், சிறிலங்கா அரசோ, ஈழத் தமிழ் மக்களை அழிப்பதற்கும் அவர்களின் தாயக நிலத்தை சுருட்டுவதற்கும் முக்கிய இடத்தை கொடுக்கின்றது. இதனால் தான் சிறிலங்கா பெரும் பொருளாதாரப் பின்னடைவுக்கும் முகம் கொடுத்து நிற்கின்றது.
தமிழ் இனத்தை ஒடுக்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்திற்கும் காவல்துறை தரப்புக்குமான பாதுகாப்பு செலவீனங்களுக்கு சுமார் 40 வீதமான நிதி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இதுவே பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று எனவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு செலவீனம்

இதேவேளை, மூன்றாம் கட்டஈழப்போர்க் காலத்தில் (1995-2002) 1346 மில்லியன் டொலர்களும், சமாதான காலப்பகுதியில் (2002-2005) 1056 மில்லியன் டொலர்களும், நான்காம் கட்ட ஈழப்போரில் (2006-09) 1499 மில்லியன் டொலர்களும் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்காக தனது இராணுவச் செலவீனங்களாக சிறிலங்கா செலவிட்டள்ளமையை அறிய முடிகின்றது.
2009 மற்றும் 2017ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலும் போர்க்காலத்தினை விட அதிகமாவே 1716 மில்லியன் டொலர்களை சிறிலங்கா அரசு இராணுவத்துறைக்கு செலவிட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இனவழிப்பு யுத்த காலத்தில் மாத்திரமின்றி தற்போதும் இராணுவத்தரப்பிற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. தற்போதைய சூழலில் பாதுகாப்பு தரப்புக்கு 11 வீதமான நிதி ஒதுக்கீட்டை இலங்கை அரசு ஒதுக்கி வருகின்றது. அத்துடன் உலக அளவில் தனது இராணுவத்தினை 99 வீதமான படையினரை இயங்கு நிலையில் வைத்திருக்கும் நாடாக சிறிலங்கா மாறியுள்ளதோடு, ஆண்டுக்கு 170 மில்லியன் டொலர்களை இராணுவத்தின் ஓய்வூதியத்துக்கு செலவிடுகின்றமை மற்றும் போரின் ஓய்வுக்கு பின்னர், பாதுகாப்பு தரப்பினரின் சம்பளத்தினை 45வீதத்தினால் அதிகரித்துள்ளமை போன்றவையும் கூட பொருளாதார சிக்கலுக்கு அடிப்படையானவை.
இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக இராணுவம், போர், போர்தளபாடங்கள் என பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டு தமிழ் இனத்தையும் அழித்து தன்னையும் அழிக்கும் செயற்பாட்டில் சிறிலங்கா ஈடுபடுகிறது.
ஈழத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை

இந்தியா நிலவில் கால் வைப்பதற்காக கடுமையான முயற்சிகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வந்த சூழலில் சிறிலங்கா அரசு என்ன முயற்சிகளில் ஈடுபட்டது என்பதை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை கட்டமைப்பதிலும் ஈழத் தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்துவதிலும் சிறிலங்கா அரசு முழு அளவு கவனத்திலும் கடும் உழைப்பிலும் இருந்துள்ளது.
83 ஜூலை இனப்படுகொலையாக இருக்கலாம், 81இல் யாழ் நூலக எரிப்பாக இருக்கலாம் அரச அமைச்சர்களே அரசின் பிரதிநிதிகளாக நின்று இனம், அறிவு, பொருளதாரம், பண்பாடு என்பவற்றின் மீதான பேரழிப்பை முன்னெடுத்தனர். இதுவே இவர்களின் சிந்தனை திறனாக இருந்தது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் முழுவதும் தமிழர் நிலத்தில் கால் வைப்பதிலேயே சிறிலங்கா அரசும் பேரினவாதிகளும் முழுக் கவனத்தை செலுத்தினர். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்கின்ற தாயகம். அங்கு சிங்களக் குடியேற்றங்களை செய்வதில் சிறிலங்காவை ஆட்சி செய்த தலைவர்கள் பெரும் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களின் பெயர்களில் சிங்களக் குடியேற்றங்களை ஊக்குவித்து முன்னெடுத்தனர்.
வடக்கு கிழக்கின் எல்லைகளிலும் தமிழர் தாயகத்தை இரண்டாகக் கூறுபோடும் அளவுக்கு பெரும் கால்களாக ஆக்கிரமிப்பு முன்னெடுப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நாவற்குழி வரையிலும் அது நீண்டது.
இது இராணுவத்தின் பூமி

இராணுவத்தினர் பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்திருந்த நிலையில், அதனை விடுவிக்க தமிழ் மக்கள் போர் முடிந்து கடந்த பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். தமிழர்களின் தேசமே இராணுவ முகாகங்களால் சூழப்பட்டவையாக உள்ளது. இது இராணுவத்தின் பூமி என்று எச்சரிக்கும் வாசகங்கள் எங்கள் நிலமெங்கும் நாட்டப்பட்டுள்ளன. இன்னமும் வழிவிடப்படாத ஊர்களும் நிலங்களும் எங்கள் தேசத்தில் உள்ளன. இந்த நிலையில் மற்றொரு புறத்தில் நிலம்மீதான ஆக்கிரமிப்பும் எங்கள் கழுத்தை திருகுகிறது.
இந்தியா நிலாவில் கால் வைக்கும் தருணத்தில் சிறிலங்கா எங்கள் நிலத்தில் ஆக்கிரமிப்பு கால் வைப்பதுடன் புத்தர் இங்கு இருந்தார், என்றும் விகாரை இங்கு இருந்தது என்றும் புனை கதை பேசிக் கொண்டு எங்கள் நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் மட்டுமே நடக்கையில் எப்படி சிறிலங்கா உலக நாடுகளுடன் போட்டியிட்டு பயணிக்க முடியும்? குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்த இடத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறி பௌத்த விகாரை அமைக்கப்பட்டு, அங்கு தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதளவுக்கு இடையூறுகள் நிகழ்ந்தன.
மிகப் பெரும் இறுதி இனவழிப்புப் போரால் ஒன்றரை இலட்சம் மக்களை இழந்த பிறகும், மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்ட பிறகும் கூட தமிழர் நிலங்களை பிடுங்குவதை மாத்திரமே ஒற்றை செயலாகவும் கடமையாகவும் சிறிலங்கா தேசம் தொடர்கின்ற நிலையில், எப்படி பொருளாதார மீட்சியும் உயர்ச்சியும் ஏற்படும்? இந்திய இளைஞர்களிடம் இருந்து இலங்கை இளைஞர்கள் பாடங்களை கற்க வேண்டும் என்று விமல் வீரவன்ச கூறுகின்றார். இந்தியாவில் பல மொழிகளைப் பேசுகின்ற மக்கள், பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் அதிகாரம் மிக்க சமஷ்டி ஆட்சியினால் ஒன்றுபட்டுள்ளனர்.
அன்ரன் பாலசிங்கத்தின் கூற்று

இலங்கையில் எதுவுமற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூட பெரும் தடைவிதிக்கின்ற விமல் வீரவன்ச போன்றவர்கள், இலங்கை இளைஞர்களுக்கு ஒற்றுமையை குறித்து போதிக்கும் தகுதி கொண்டவர்களா? ஈழத் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புப் போரை முன்னெடுத்து விடுதலைப் புலிகளை அழியுங்கள் என்று அன்றைக்கு மகிந்த அரசுக்கு ஆணையிட்ட விமல் வீரவன்ச போன்றவர்கள் இலங்கைத் தீவில் ஆற்றல் மிக்க பல்லாயிரம் விடுதலைப் புலி வீரர்களை கொன்றழித்துவிட்டு இலங்கை வளர்ச்சி பற்றி பேசலாமா?
சிறிலங்கா அரசு தமிழர் தேசத்தை அங்கீகரித்தால், இலங்கைத் தீவில் வளம்மிக்க இரண்டு தேசங்கள் வல்லமை கொண்டு உருவாகும். அது ஒன்றுக்கொன்று சிநேகத்தையும் வளத்தையும் பகிர்ந்துகொள்ளும் என்ற கருத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அன்றைக்கு முன்வைத்தார்.
அதனை சிறிலங்கா அரசு ஏற்றிருந்தால், தமிழர் தேசம்மீது போரையும் ஒடுக்குமுறையையும் மேற்கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பயணித்திருந்தால் - தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நிலத்தில் இருந்திருந்தால் ஒருவேளை சிறிலங்காவும் நிலவில் கால்பதித்திருக்கும்.