தீவிர போர் பயிற்சியில் சீனா..! பதிலடி கொடுக்க தயார் நிலையில் தாய்வான்: வலுக்கும் போர் பதற்றம்
போர் பயிற்சி
தாய்வான் மீதான தாக்குதலுக்கான ஒத்திகை போன்ற போர் பயிற்சியில் நேற்று சனிக்கிழமை சீன விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக தாய்வான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்களது கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக தாய்வான் அருகே சீனா போர்ப்பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன் , பருவநிலை மாற்றம் , பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை நிறுத்திவைப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இரத்து செய்யப்படும் பேச்சுவார்த்தை
அமெரிக்கா - சீன போர்க்கள தளபதிகள் பேச்சுவார்த்தை ,
அமெரிக்க - சீன பாதுகாப்புக் கொள்கை ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை ,
அமெரிக்க - சீன கடல் பாதுகாப்பு ஆலோசனை ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஆகியவை இரத்து செய்யப்படுகின்றன.
நிறுத்தி வைக்கப்படும் அமெரிக்க - சீன ஒத்துழைப்பு
சட்ட விரோத அகதிகள் கடத்தல் தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பு,
குற்றவியல் விவகாரங்களில் இருதரப்பு சட்ட ஒத்துழைப்பு,
போதை மருந்து கடத்தலுக்கு எதிரான அமெரிக்க - சீன ஒத்துழைப்பு,
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்து வதற்கான இரு நாட்டு ஒத்துழைப்பு ஆகியவை நிறுத்தி வைக்கப்படுகின்றன, என சீன வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
தீவிர போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை காலை முதல் தைவான் ஜலசந்தியில் பல சீனக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தீவிர போர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன போர்க்கப்பல்கள் தாய்வான் - சீனாவை பிரிக்கும் அதிகாரபூர்வமற்ற எல்லைக் கோட்டை கடந்தன . இது ஆத்திரமூட்டலின் ஒரு பகுதி யாகும் எனவும் தாய்வான் கூறியுள்ளது.
சீனாவின் ஆத்திரமூட்டல்களை அடுத்து தாய்வான் இராணுவம் முழு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் வான்படைகள் மற்றும் கப்பல்ளை தயார் நிலையில் வைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.