அமைதிக்கான நடைபயணம்! மூன்று நாட்களுக்கு மூடப்படும் இறைச்சி - மதுபானக் கடைகள்
கேகாலை மாவட்டத்தில் பிக்குமார்களின் 'ஏகிப்பசிகோ' அமைதி நடைபயணம் நடைபெறுவதை முன்னிட்டு, ஏப்ரல் 24 முதல் 26 வரையிலான மூன்று நாட்களுக்கு சாலை ஓரங்களில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைதி நடைபயணம் கடந்து செல்ல உள்ள கடுகண்ணாவ முதல் வரகாப்பொல வரையிலான பிரதான வீதிப் பகுதிகளில் இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேகாலை மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - கண்டி பிரதான வீதி
சுற்றுச்சூழல் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான தம்மிக படபெந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவும் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், ஆன்மீக நடைபயணம் நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பு - கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் ஒலிப்பான்களை (Horns) ஒலிக்க வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்த நிகழ்வின் போது ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் உதவியும் நாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |