விவசாயிகளுக்கான உர விநியோகம் - அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், அதற்கான முறையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 25,000 தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
உரம் அடங்கிய கப்பல்
அதற்கமைய, உலகளாவிய சூழ்நிலையில் உருவாகியுள்ள உரப் பிரச்சினையை அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிறுபோகம் ஆரம்பமாகும் போது விவசாயிகளிடையே உரப் பிரச்சினை குறித்த கவலைகள் காணப்பட்ட போதிலும், நாட்டில் தற்போது தேவையையும் விட அதிகளவில் சேற்று உரம் மற்றும் பண்டி உரம் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெற்செய்கைக்குத் தேவையான யூரியா உரம் தொடர்பில் சிக்கல் காணப்பட்டாலும், நாட்டில் தற்போது ஒரு இலட்சம் தொன் யூரியா கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இன்று 25 ஆயிரம் தொன் உரம் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |