இரத்து செய்யப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்! உறுதியளித்துள்ள நீதி அமைச்சர்
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக மக்கள் நலன் சார்ந்த புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய சட்டமூலம் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள்
மேலும், இந்தச் சட்டம் தனிநபர்களையோ அல்லது ஏனைய அரசியல் தரப்பினரையோ ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும், உண்மையான பயங்கரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கிலேயே இது கொண்டுவரப்படுகிறது அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

மேலும் “கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் முன்னைய அரசியல்வாதிகள் முயற்சி எடுத்து இருந்தால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் சகவாழ்வு நல்லிணக்கம் ஒற்றுமை என்பவற்றை அமைப்பதற்கு முடியாமல் போயிருக்கின்றது.
இந்த அரசாங்கம் அதற்கான முயற்சிகளை எடுக்கும். தமிழர்களை இரண்டாம் பிரஜைகளாக பார்க்கின்ற எந்த ஒரு சந்தர்ப்பங்களுக்கு இனி இடம் அளிக்கப் போவதில்லை.
கோட்டாபய ராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றிருந்ததாக தெரிவித்து வந்தாரே தவிர இந்த அலுவலகங்களை செயல்படுத்த விடவில்லை.
குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களினுடைய அழுத்தங்கள் காரணமாகவே இந்த அலுவலகங்கள் பெயரளவில் ஆரம்பிக்கப்பட்டன” என்றார்.
மேலதிக தகவல் - சிவா
தமிழர்களின் கண்ணீருக்கு பதில் தேடும் PTA- அதிகாரத்தின் ஆயுதம்! காலம் கடந்து குறிவைக்கப்படும் கோட்டாபய
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |