இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு 12.5 வீத மேலதிக வரி : அமெரிக்கா யோசனை
இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யவும், அதனை நடைமுறைப்படுத்தவும் தவறிய குற்றச்சாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரை மேலதிக வரியை விதிப்பதற்கு அமெரிக்க நிர்வாகம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆடை மற்றும் துணி இறக்குமதி
இதற்கமைய, கனடா, மெக்சிகோ, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத மேலதிக வரியை விதிக்க பிரேரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை உட்பட மேலும் 45 நாடுகளுக்கு 12.5 சதவீத மேலதிக வரியை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆடை மற்றும் துணி இறக்குமதிகளுக்குக் குறைந்த வரி விகிதங்களின் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவை அமெரிக்க சந்தைக்குள் அனுமதிக்கும் சிறப்பு பொறிமுறை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த பிரேரணைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் ஜூலை 6ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், ஜூலை 7ஆம் திகதி அது தொடர்பான பொது விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |