மகிந்த பதவி விலகா விட்டால் ஏற்படப்போகும் நிலை - பேராசிரியரான தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகாவிட்டால் மகாசங்க பிரகடனத்தின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப்படுவார்கள் என மகாசங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற மகாசங்கத்தின் நிகழ்வில் உரையாற்றிய ரஜரட்டை பேராசிரியர் ஒலங்கவத்தை சந்திரசிறி தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிகளிற்கு அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.உரிய துறைகளில் நிபுணர்களிடம் ஆலோசனைகளை பெறவேண்டும் என தெரிவித்துள்ள அவர், மக்களின் வாழ்க்கைக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பில் உரிய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும். நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பௌத்தமகாசங்க பீடாதிபதிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அரச தலைவர் இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி விலகவேண்டும் அவர் பதவி விலகாவிட்டால் அனைத்து அரசியல்வாதிகளையும் நிராகரிக்கும் பிரகடனத்தை பௌத்த மகாசங்கம் பிரகடனம் செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
